சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஊழியரைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில் டாஸ்மாக் மதுபானக் கூடம் உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக சு.சத்தியமூர்த்தி வேலை செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்த பின்னர், சத்தியமூர்த்தி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாராம்.
அப்போது மதுபானக் கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்த 3 மர்ம நபர்கள் சத்தியமூர்த்தியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைக் கேட்டனராம். ஆனால் அவர், பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். உடனே அவர்கள், அவரை தாக்கி பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.