பருவநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணித்து அறிவிப்பு வெளியிடுவதற்கான சிறப்பு ஆராய்ச்சி மையமானது சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய - ஜெர்மனி பராமரிப்பு மையத்தின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்ட அந்த மையத்தினை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை அளிப்பதற்காகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியிடுவதற்காகவும் அந்த மையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடற்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் பாதிப்புகளையும், தட்பவெட்ப மாற்றங்களையும் அதன் மூலம் துல்லியமாகக் கணிக்கலாம் என்று கூறப்படுகிறது. புயல் பாதிப்பு, சுனாமி, கடல் சீற்றம், கடலுக்குள் நிலவும் சீதோஷ்ண மாற்றங்கள் ஆகியவை குறித்து அந்த மையத்தில் ஆராய்ச்சி செய்யப்படும். ஆராய்ச்சி மையத் தொடக்க நிகழ்ச்சியில் அறிவியல் - தொழில்நுட்பத் துறை தலைவர் அகிலேஷ் குப்தா, கடல்சார் பொறியியல் துறை தலைவர் சன்னாசி ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.