சென்னையில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்ததாக மெக்கானிக்கை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீ.வீரபாண்டி (23). இரு சக்கர வாகன மெக்கானிக். வீரபாண்டியும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, அண்மையில் பிரிந்தனர். இந்நிலையில் வீரபாண்டி, தன்னைக் காதலிக்குமாறு மாணவியிடம் மீண்டும் வற்புறுத்தி வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை அந்த மாணவி வீட்டுக்குச் சென்ற அவர், தன்னைக் காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ராயலாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வீரபாண்டியைக் கைது செய்தனர்.