சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரே குடியிருப்பில் இருந்த 9 பேரை போலீஸார் பிடித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒரு கும்பல் கஞ்சாவை பாக்கெட்டுகளில் போட்டு தயார் செய்வதாக கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ஜெகதீசனுக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் கஞ்சாவை பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டிருந்த பெ.கருப்பன் (24), பெ.ஸ்டீபன் (26),மு.சரத்குமார் (21), செ.தமிழரசன் (19), ப.செந்தில்குமார் (24),ரா.கீர்த்திவாசன் (21), மோ.வினோத்குமார் (27), கோ.சரவணன் (31), நா.வினோத் (27) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.