வாக்குப்பதிவு நாளன்று கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்யவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்வி உறுதி என்ற சூழல் உருவான காரணத்தால் பல இடங்களில் கலவரங்கள் வெடித்துள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் ஆரம்பம் முதலே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வந்தனர். அவர் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் மதவாத, ஜாதிய போக்கு கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்த வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சிகள் எடுபடாத காரணத்தால் பொன்பரப்பியில் அவருக்கு ஆதரவாக இருந்த தலித் மக்களின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 20-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் சிலரை கைது செய்தாலும் இந்தக் கொடிய சம்பவத்தின் சூத்திரதாரிகளாக இருந்த அதிமுக - பாமகவினரைக் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.