மூளைச்சாவு அடைந்த மும்பையைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் இதயம் தானமாகப் பெறப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு குழந்தைக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்: மும்பையைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தைக்கு மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. குணப்படுத்த இயலாத அளவுக்கு அந்நோய் தீவிரமடைந்ததன் காரணமாக அக்குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
இதையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இதனிடையே, சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய பாதிப்பு காரணமாக விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது. உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும், அக்குழந்தையின் இதய செயல்பாடுகளை மீட்டெடுக்க இயலவில்லை. இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அதற்கு தீர்வாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த மும்பை குழந்தையின் இதயம் அங்கிருந்து மலர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. டாக்டர் சுரேஷ் ராவ் தலைமையிலான மருத்துவர் குழு, அதனை சம்பந்தப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்தனர். தற்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக போர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.