சென்னை பாடியில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டார்.
பாடி கலைவாணர் நகர், மதுரை வீரன் தெருவைச் சேர்ந்தவர் கு.தமிழ்செல்வன் (56). இவர் அங்கு வாழைப்பழ மண்டி நடத்தி வந்தார். இவர், திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது இளைய மகன் சூர்யபிரகாஷ் (27) தமிழ்செல்வனிடம் தகராறு செய்தாராம். தகராறு முற்றவே சூர்யபிரகாஷ், அங்கு கிடந்த கத்தியால் தமிழ்செல்வனை குத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த தமிழ்செல்வனை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே தமிழ்செல்வன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சூர்யபிரகாஷை கைது செய்தனர்.