மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்காக தேர்வு மையங்களை ஒதுக்குவதில் குளறுபடிகள் இருக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"நீட்' தேர்வு, வரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், மாணவர்கள் விரும்பிக் கேட்டுள்ள மையங்களுக்குப் பதிலாக வெவ்வேறு மையங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன.
மேலும், தேர்வு மையங்களின் பெயரும், அவற்றுக்கான எண்ணும் வேறுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, தொடக்க நிலையிலேயே இதுபோன்ற குளறுபடிகளை நிவர்த்தி செய்து, மாணவர்கள் எந்தவிதமான பதற்றமும் இல்லாத வகையில் "நீட்' தேர்வினை எழுத வழிசெய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.