கேளம்பாக்கம் லட்சுமி அவென்யூவைச் சேர்ந்த சரவணன் மகன் சுரேஷ்குமார் (19). இவர் செம்மஞ்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வந்தார். சுரேஷ்குமார் சரிவர படிக்காமல் இருந்தாராம். இதைக் கண்டித்த தாயார் ராஜேஸ்வரி, சுரேஷ்குமார் படிக்கும் கல்லூரிக்கு அண்மையில் சென்று, தனது மகன் சரியாக படிப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ்குமார் அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் சரவணனும்,ராஜேஸ்வரியும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் ஒரு இளைஞரின் சடலம் உத்தண்டி கடற்கரையில் கரை ஒதுங்கியது. கானாத்தூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அது சுரேஷ்குமாரின் சடலம் என்பதும் கடலில் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.