புழல் மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஒரு செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: புழல் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் இந்து தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டிருக்கும் போலீஸ் பக்ருதீன் அறையின் அருகே தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஊறுகாய் பாட்டிலில் இருந்து ஒரு செல்லிடப்பேசி, சார்ஜர், ஹெட்போன் போன்றவற்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல சிறையில் பாசுமதி அரிசி, மசாலா பொருள்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இவை சிறைக்குள் எப்படி கொண்டுவரப்பட்டன என்று சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சிறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.