அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமராவதி ஆற்றின் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமராவதி ஆற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கனியூரில், விவசாய நிலத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக தனிநபர் ஒருவர், அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சாலையைத் தோண்டி குழாய் பதித்துள்ளார். அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தாமல், அங்குள்ள கிணற்றில் சேமித்து வைத்து லாரிகள் மூலம் கோழிப்பண்ணைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதுபோன்று சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதால், அமராவதி ஆற்றின் தண்ணீரை நம்பி இருக்கும் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமிக்கப்படுகிறார். மனுதாரரின் புகார் தொடர்பாக வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து ஆகஸ்ட் 11 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.