ஈரானில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து கப்பலில் பணியாற்றிவரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இங்கிலாந்து கப்பலில் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா உட்பட இந்தியர்கள் 18 பேர் ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என அவர்களின் பெற்றோர், மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மத்திய அரசும் கப்பலில் பயணம் செய்த இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இருந்தபோதும், கப்பலில் சென்ற இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகள் தொடர்ந்து கிடைப்பதற்கும், காலம் தாழ்த்தாமல் அவர்களை மீட்பதற்கும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.