சென்னை அருகில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்பு காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதைக் காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே இருந்த காண்டாமிருகம் கடந்த 1989-ம் ஆண்டு இறந்துவிட்டது. அதற்குப் பிறகு 30 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் இல்லை. இந்தநிலையில் தற்போது அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்காவில் இருந்து 4 வயது ஆண் காண்டாமிருகம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சனிக்கிழமை இரவு டிரக் மூலம் இந்த காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டது.
அந்த ஆண் காண்டாமிருகத்தை விலங்கியல் மருத்துவர்கள் தனியாக ஓரிடத்தில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்குத் துணையாக அடுத்த சில தினங்களில் மற்றொரு பெண் காண்டாமிருகம் வரவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் வந்த பின்பு ஜோடியாக இந்தக் காண்டாமிருகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படலாம் எனக் கூறப்படுகிறது.