சுதந்திர தினவிழாவையொட்டி வரும் 15-ஆம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் சுதந்திர தினம், குழந்தைகள் தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கூட்டத்தை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களை நடத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநிற்றலை தடுக்கவும், சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. அது போன்று இல்லாமல் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளின் பெற்றோரும் இதில் பங்கேற்க செய்ய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.