பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிகள் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் சந்தா தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு 2019-20-ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகைகளை அனைத்து வகையான பள்ளிகளில் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வசூலித்து ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி தொடக்கப் பள்ளிக்கு ரூ.210, நடுநிலைப்பள்ளிக்கு ரூ.285, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.860 மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,260 வசூல் செய்யப்பட வேண்டும்.
முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்குரிய சந்தா தொகைகளை செலுத்தும்போது பள்ளியின் எண்ணிக்கை, முகவரி உள்பட முழு விவரங்களுடன் இணைப்புக் கட்டணம், சந்தா பணத்தை சென்னையில் மாற்றத்தக்க வகையில் தனித்தனி வரைவோலைகளாக எடுத்து அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.