சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு ஷேர் ஆட்டோ, கார் சேவையை நிகழாண்டு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 44,974 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் நிகழாண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை 4,40,087 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரையும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றனர். இந்த ரயில்களில் தினசரி சராசரி 98 ஆயிரம் பயணிகள் பயனம் செய்கின்றனர்.
இதற்கிடையில், மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில், ஷேர் ஆட்டோ, கார்களை பயன்படுத்த ஷேர் டிரிப் முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை, அசோக்நகர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ சேவையும், எழும்பூர், ஏஜி-டிஎம்எஸ், அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கார் சேவையும் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவையை கடந்த ஜூலை மாதத்தில் 44,974 பேர் பயன்படுத்தியுள்ளனர். ஜூலை மாதத்தில், கார் சேவையை 6,501 பேரும், ஷேர் ஆட்டோ சேவையை 38,473 பேரும் பயன்படுத்தினர். கார் மற்றும் ஆட்டோ சேவையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 33,866 பேர் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் நிகழாண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை ரூ.4,40,087 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியது:
ஷேர் ஆட்டோ, கார் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மெதுவாக உயர்கிறது. அண்மையில், மெகா கேப்ஸ் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து போர்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சிறிய வாகன இணைப்புச் சேவையை தொடங்கியது. சென்னை சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏஜி டி.எம்.எஸ்., நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை மற்றும் செயலி மூலமாக இதற்காக கட்டணம் செலுத்தி பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மீதமுள்ளஅனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றார் அவர்.