சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, சம்ஸ்கிரியா அறக்கட்டளை ஆகியவை சார்பில் அடையாறு காந்திநகர் நூலகத்தில் வாசகர்கள் பயன்பாட்டுக்காக புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் காந்தி நகர் வட்டார நூலகம் 14,350 சதுர அடியில் அமைந்துள்ளது. இங்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 246 நூல்கள் உள்ளன. 15 ஆயிரத்து 273 உறுப்பினர்கள் உள்ளனர். 174 புரவலர்கள் உள்ளனர். தமிழ், ஆங்கில பருவ இதழ்கள், நாளிதழ்களுடன் இணையதள பிரிவு, குடிமைப்பணி பயிற்சி பிரிவு, குழந்தைகள் பிரிவு என அனைத்து வசதிகளுடன் 1981-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காந்தி நகர் வட்டார நூலகத்தில், சம்ஸ்கிரியா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் பிரிவு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் கூறியது:
இந்த நூலகத்தில் குழந்தைகள் பிரிவு புதிய பொலிவுடன் வண்ணமயமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட 700 சிறப்பு நூல்கள், 3 கணினிகள், கணினி மேஜைகள், நாற்காலிகள், வட்ட மேசை, மர நூலடுக்கு ஆகியவை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மாதம் இருமுறை சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் நிகழ்ச்சிகள் மற்றும் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. எனவே இந்த நூலகத்தை அடையாறு காந்தி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் அதிகளவில் வருகை தந்து அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார்.