பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை விவகாரம்: ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கோயிலை இடிக்க உத்தரவு

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கோயிலை இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கோயிலை இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் திரு.வி.க நகரைச் சேர்ந்த எல்.டி.வில்லியம் மோசஸ் தாக்கல் செய்த மனுவில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை ரெட் ஏரி வரை செல்கிறது. இந்தச் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. 
இதனால் பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை கடந்த 1986-ஆம் ஆண்டே  70 அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. 
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை அமல்படுத்தாததால் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர், பெரம்பூர், அயனாவரம் வட்டாட்சியர்கள் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆக்கிரமிப்புகள் எதுவும் இல்லை என வட்டாட்சியர்கள் தரப்பில் முரண்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் கொண்ட அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக கூறி புகைப்படங்களைத் தாக்கல் செய்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீனஸ் திரையரங்கம் எதிரில் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள கோயிலை ஏன் அகற்றவில்லை என கேள்வி எழுப்பினர். 
அப்போது மாநகராட்சி தரப்பில், ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அந்த தண்டு மாரியம்மன் கோயிலுக்கு அறங்காவலர்களாக உள்ள 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட கோயிலில் உள்ள சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றுவது மற்றும் கோயிலை இடிப்பது குறித்து கோயிலின் அறங்காவலர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.  
கோயில் அறங்காவலர்கள் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சென்னை மாநகராட்சி கோயிலை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும்  29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com