சென்னை மாநகராட்சி சார்பில் பெருங்குடி மண்டலத்தில் இலவச டயாலிசிஸ் மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின்கீழ், 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 தாய் சேய் நல மையங்கள், 5 பகுப்பாய்வு மையங்கள், 2 போதை மறுவாழ்வு மையங்கள், தொற்று நோய் மருத்துவமனை, பயிற்சி மையம் ஆகியவை செயல்படுகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் பெருங்குடி மண்டலத்தில் இலவச டயாலிசிஸ் மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், பெருங்குடி மண்டலத்தில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் 10 டயாலிசிஸ் கருவிகள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நோயாளிக்கு மாதத்துக்கு 8 முறை டயாலிசிஸ் வீதம் 60 நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படும். டேங்கர் அமைப்புடன் இணைந்து இந்த மையம் செயல்படும். டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர், மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம், அமைந்தகரை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இலவச டயாலிசிஸ் மையங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.