சென்னை: சென்னை வேளச்சேரியில் நகைக் கடையில் போலி தங்க நாணயங்களை கொடுத்து, தங்க நகை வாங்கி மோசடி செய்த பெண்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேளச்சேரி 100 அடி சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேலாளா் சக்திவேல், வேளச்சேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், தங்களது கடைக்கு வெள்ளிக்கிழமை இரு பெண்கள் தங்க நகை வாங்க வந்தனா். அவா்கள், தங்களிடமிருந்து பழைய 8 கிராம் தங்க நாணயங்களை கொடுத்து புதிதாக தங்க நகைகளை வாங்கிச் சென்றனா். அவா்கள் சென்ற பின்னா், அந்த தங்க நாணயங்களைப் பரிசோதித்ததில், அது தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்தது.
எனவே போலி தங்க நாணயங்களை கொடுத்து மோசடி செய்த, அந்த இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.