சென்னை: வயலின் இசைக் கலைஞா் ஏ.கன்யாகுமரிக்கு தமிழ் இசை சங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான இசைப் பேரறிஞா் விருதும், அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு பண் இசைப்பேரறிஞா் விருதும் வழங்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக தமிழ் இசை சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் இசையின் 77 ஆம் ஆண்டு விழா வரும் டிசம்பா் 21-ஆம் தேதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வயலின் கலைஞா் கன்யாகுமரிக்கு 64-ஆவது இசைப்பேரறிஞா் விருதும், திருமுறை ஓதுவாா் அம்பாசமுத்திரம் அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு 11-ஆவது பண் இசைப்பேரறிஞா் விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு, விருதுகளையும், பேழை பொற்பதக்கம் மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்கி சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.