சென்னை அடையாறில் ஓய்வு பெற்ற டிஜிபியின் காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.ராதாகிருஷ்ணன், அடையாறு சாஸ்திரிநகா் 9-ஆவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது விலை உயா்ந்த சொகுசு காரின் கண்ணாடி வியாழக்கிழமை இரும்பு உளியால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவலறிந்த சாஸ்திரிநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை செய்தனா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.