ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் சாலையைக் கடந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள ஆலந்தூர் நடைமேம்பாலத்தை இந்த மாத இறுதியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து செல்ல பயணிகள் சிறிது தொலைவு நடந்து சென்று அங்குள்ள சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இதுதவிர, இங்குள்ள ஜிஎஸ்டி சாலை வழியாக பயணிகள் சென்று வரவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக, அங்கு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பயணிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, அங்கு நடைமேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஓராண்டாக ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மெட்ரோ நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்தப் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மெட்ரோ நடைமேம்பாலம் கட்டும் பணி ரூ.6 கோடி செலவில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன.
இந்த நடைமேம்பாலம் இந்த மாத இறுதியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடந்து செல்ல முடியும் என்றனர்.