சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கநகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை பெரவள்ளூர் பெரியார் நகர் கந்தசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் வெளியூரில் நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் தங்கவேலு வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அப் பகுதி மக்கள் உடனடியாக தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தங்கவேலு, பெரவள்ளூர் காவல் நிலையத்தை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வீட்டில் பீரோவில் இருந்த 60 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.