கள்ளத் துப்பாக்கி வழக்கு: கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் சென்னையில் கைது

கள்ளத்துப்பாக்கி வழக்கில் தேடப்பட்ட மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.


கள்ளத்துப்பாக்கி வழக்கில் தேடப்பட்ட மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வங்கதேசத்தில் இருந்து கள்ளத்துப்பாக்கி, இந்திய ரூபாயின் கள்ளநோட்டு ஆகியவற்றை கடத்தி, இங்கு புழக்கத்தில் விட்டதாக கொல்கத்தா எஸ்டிஎப் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொல்கத்தா பீர்பூம் பகுதியைச் சேர்ந்த ஹசன்ஷேக் (29),அனாமுல் மாலிக் (25) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.  இவ் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் இருவரையும் கைது செய்து, ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கொல்கத்தா போலீஸார் இருவர் குறித்தும் விசாரணை செய்தனர்.
விசாரணையில், மாலிக் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஏ.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ஹசன்ஷேக் நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் ராஜரத்தினம் அவென்யூவில் உள்ள ஓர்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துக் கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இத் தகவலின் அடிப்படையில் திங்கள்கிழமை இங்கு வந்த கொல்கத்தா போலீஸார், மத்திய உளவுப்பிரிவு போலீஸார்,சென்னை போலீஸார் ஆகியோர் உதவியுடன் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கொல்கத்தா போலீஸார் உடனடியாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மேற்குவங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com