சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மடிப்பாக்கம் யோகேஸ்வரன் தெருவை சேர்ந்த எட்வர்டு மகன் ரோகன் அந்தோணி சாமுவேல் (20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.
மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சாமுவேல் மடிப்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றார்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாமுவேல், சுமார் 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சாமுவேலை, பொதுமக்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சாமுவேல் இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.