சென்னை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை (பிப்ரவரி 17) 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் 8, 10, பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் தங்களது கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.