ரூ.1 கோடி மதிப்புள்ள முருகன் சிலை திருட்டு வழக்கில், தேடப்பட்டு வந்த கன்னியாகுமரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் தொன்மையான ரூ.1 கோடி மதிப்புள்ள முருகன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையிலும், அவரது உத்தரவின் அடிப்படையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தொன்மையான முருகன் சிலையை போலீஸார் மீட்டனர்.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரையும் கைது செய்தனர்.
இவ் வழக்குத் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலியில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து சிலை திருடப்பட்டது என்பதும், அந்த சிலையை சிவக்குமார்,இஸ்மாயில், கன்னியாகுமரியை சேர்ந்த முகேஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த தேசனடிகள் ஆகியோர் திருடி விற்பதற்கு முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முகேஷை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் முகேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் சிலை திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்,கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முகேஷ்