கஞ்சாவுடன் மருத்துவ கல்லூரி மாணவர் கைது
By DIN | Published On : 14th February 2019 04:19 AM | Last Updated : 14th February 2019 04:19 AM | அ+அ அ- |

சென்னை கோயம்பேட்டில் கஞ்சா வைத்திருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே போலீஸார் புதன்கிழமை அதிகாலை ரோந்து வந்தபோது சந்தேகம்படும்படியாக இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்தும், இருவரும் தப்பியோடினர்.
அதில் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில் கேரள மாநிலம் எர்ணாகுளம் குன்னம்புராதா பகுதியைச் சேர்ந்த நூருதீன் மகன் நஜூமோன் (20) என்பதும், புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நஜூமோனை கைது செய்தனர். நஜூமோனிடம் கஞ்சாவை கொடுத்துவிட்டு தப்பியோடிய, சென்னை அமைந்தகரை எம்.எம். காலனி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ரா.விக்கி என்ற விக்னேஷ் (26) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.