சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் பிரதான தெருவைச் சேர்ந்தவர் சரவணன், தனது மனைவியுடன் புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சிந்தாதிரிப்பேட்டை டாம்ஸ் சாலை - மீரான் சாகிப் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு லாரி, திடீரென அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சரஸ்வதி காயமடைந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், அந்த லாரி ஓட்டுநர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த லகான் சிங்கை தாக்கினர்.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்கள் தாக்குதலில் காயமடைந்த லகான் சிங்கை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சரஸ்வதி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.