சென்னை கோயம்பேடு சந்தையில் நடைபெற்ற சோதனையில் தடையை மீறி பயன்படுத்தப்பட்ட சுமார் 1 டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் அதன் நிர்வாகக் குழு (எம்.எம்.சி.) அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அலுவலர்கள் குழுவினர் புதன்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காய்கறி, பழம், பூ சந்தைகளில் ஒவ்வொரு கடையாகச் சென்று பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருள்கள் அங்கு விற்பனைக்கு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுமார் ஒருடன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.