ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்னணு (எலெக்ட்ரிக்) ஆட்டோ சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர், பரங்கிமலை, நந்தம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வகையில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் நரசிம்ம பிரசாத், நம்ம ஆட்டோ திட்ட இயக்குநர் மஞ்சுமேனன் ஆகியோர் கொடியசைத்து எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தனர். இந்த ஆட்டோவில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு 8 மணி நேரத்துக்கு ரூ.800 ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட பேட்டரியை 4 மணி நேரத்துக்கு சார்ஜ் செய்தால், 80-100 கி.மீ. தூரம் வரை இந்த ஆட்டோ ஓடும். இந்தத் திட்டம் வெற்றி பெறும் நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். ஆலந்தூரில் இருந்து டிஎல்எப் ஐ.டி. பூங்கா, போரூர் வரை செல்ல ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.