எனக்கு எப்போதும் புதுமைப்பித்தனைப் பிடிக்கும். பிறந்த நாளுக்கோ அல்லது வேறு எந்த விழாவிலும் பிறருக்குப் பரிசாக நான் வாங்கித் தருவது புதுமைப்பித்தனின் புத்தகங்களையே.
ஆங்கில நூல்களில் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய மேன் வாட்சிங், பாடி வாட்சிங், டாக் வாட்சிங், கேட் வாட்சிங், ஹார்ஸ் வாட்சிங், பேபி வாட்சிங் என தொடர்ச்சியாக எழுதிய புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும்.
பிரான்ஸ் நாட்டின் ஓவியர் மோபியஸ் என்று அழைக்கப்படும் ஜீன் கிராட் வரைந்து வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை வெறும் காமிக்ஸ் என்ற அளவில் நின்றுவிடாமல், சொல்லும் விஷயங்கள் அதிகம். அதனால் அவற்றை எல்லாரும் பார்க்க வேண்டும்; படிக்க வேண்டும்.
எம்.சாலமன் பெர்னாட்ஷா எழுதிய இந்திய இஸ்லாமிய கலை வரலாறு என்ற புத்தகம் எனக்குப் பிடிக்கும். ஏற்கெனவே இது தொடர்பான புத்தகங்களை நான் படித்திருந்தாலும், மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தை வாங்கினேன்.
தொ.பரமசிவன் எழுதிய அழகர் கோயில், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் முதலிய புத்தகங்கள் வரலாற்றை நவீன கண்கொண்டு நோக்குபவை. அதனால் எனக்கு அவற்றைப் பிடிக்கும்.
எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும், தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம் ஆகிய இரண்டு புத்தகங்களும் புதிதாக வந்தவை. ஆழ்ந்த சிந்தனையாளரான அவரின் எல்லாப் புத்தகங்களும் எனக்குப் பிடிக்கும். வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் தவிர, என் துறை சார்ந்த புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றார்.