தமிழக காவல்துறையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி தே.க.ராஜேந்திரன் பங்கேற்றார்.
இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையின் சார்பில் ஆவடி வைஷ்ணவி நகரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் ராஜேந்திரன் தனது மனைவி ரோகிணி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
விழாவில், காவல்துறை அதிகாரிகள் பொங்கலிட்டனர். பின்னர், தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ஏடிஜிபிக்கள் அசுதோஷ் சுக்லா, முகமது ஷகில் அக்தர், அம்ரேஷ் பூஜாரி, அபய்குமார்சிங், ஆபாஷ்குமார் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.