பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் மக்கள் புறப்பட்டு செல்லத் தொடங்கிவிட்டனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, சனிக்கிழமை (ஜன.12) முதல் வரும் வியாழக்கிழமை (ஜன.17) வரை 6 நாள்கள் அரசு, அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டு செல்லத் தொடங்கினர். இதனால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் மத்திய, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்தும், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் புறப்படுகின்றன. இந்த இரண்டு ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது.
எழும்பூரில் இருந்து புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், மலைக்கோட்டை உள்பட பல்வேறு விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் கூட்டம் முழுமையாக நிரம்பி இருந்தது. இதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாம்பரம் ரயில்நிலையத்திலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. விரைவு ரயில்களில் முன்பதிவுசெய்யாத பயணிகள், பொதுப்பெட்டியில் நெரிசலுடன்பயணம் செய்தனர்.