ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம்: காவல் உதவி ஆணையர் மீது வழக்கு

சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு


சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையின் தேனாம்பேட்டை உதவி ஆணையராக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து 2018 மே மாதம் வரை சி.எஸ்.முத்தழகு என்பவர் இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தேனாம்பேட்டையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ரௌடி ராக்கெட் ராஜா உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவ் வழக்கின் அடிப்படையில், சில நாள்களுக்கு பின்னர் ராக்கெட் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர், தன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமலிருக்க உதவி ஆணையர் முத்தழகுவை தொடர்புகொண்டு பேசினார்.
இதற்கு முத்தழகு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்தழகும்,பிரகாஷும் செல்லிடப்பேசியில் பேசும் 3 உரையாடல்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது தமிழக காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த உரையாடலில் முத்தழகு, தனக்கு ரூ.5 லட்சம் ஒரு நாள் டீ அருந்தும் பணம் என மிரட்டும் வகையில் பேசியிருந்தது பொதுமக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச் சம்பவத்தினால் முத்தழகு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். முத்தழகு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை, உள்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது.
இதற்கு உள்துறை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com