எழுத்தாளர் பா.ராகவன்:
"எதையெல்லாம் திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கிறேனோ, அவையெல்லாமே எனக்குப் பிடித்த புத்தகங்கள்தாம். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் மீள் வாசிப்புக்கு உட்படுத்துவது வேறு வேறு காரணங்களுக்காக இருக்கும். உதாரணமாக, அசோகமித்திரனின் 'ஒற்றன்' நான் ஒவ்வொரு முறை நாவலை எழுத அமரும்போதும் எடுத்துச் சில பக்கங்கள் படிப்பேன். ஏன் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் "ஒற்றனை'ப் படிக்காமல் நான் இதுவரை ஒன்றுமே எழுதியதில்லை. சுந்தர ராமசாமியின் "ஜேஜே சில குறிப்புகள்' ஒரு விதத்தில் என் வாழ்வை வடிவமைத்த நாவல் என்று சொல்லலாம். நான் யாராக என்றுமே ஆக முடியாதோ, அவனாக ஜேஜே இருந்த காரணத்தினாலேயே அந்நாவல் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' வெறும் நாவல் அல்ல.
அது ஒரு சிம்பொனி. விவரிக்கவே முடியாத, வாசித்து மட்டுமே அனுபவிக்க வேண்டிய உயர்தர சங்கீதம். ஆங்கிலத்தில் ஹெமிங்வேயின் Old man and the sea, மார்க்வஸின் One hundred years of solitude இரண்டும் திரும்பத் திரும்ப வாசிப்பவை. ஆல்பெர் காம்யுவின் "அந்நியன்' மொழிபெயர்ப்பில் என்னை மிகவும் கவர்ந்தது. புனைவல்லாத எழுத்தில் இப்படி மீண்டும் மீண்டும் வாசிக்க வைப்பது அ. முத்துலிங்கத்தின் அங்கே இப்ப என்ன நேரம்?'' என்றார்.