பெருநகர சென்னை மாநகராட்சியின் "நம்ம சென்னை' செயலியில் சொத்து வரி செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், தொழில் வரி, வர்த்தக உரிமம் ஆகியவை செலுத்தும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் "நம்ம சென்னை' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த "நம்ம சென்னை' செயலியை இதுநாள் வரை 48,212 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து 18,735 புகார்கள் பெறப்பட்டு 18,528 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி வசதி அறிமுகம்: இந்நிலையில், "நம்ம சென்னை' செயலியில் கூடுதல் சேவையாக சொத்து வரி செலுத்தும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நெட் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள், ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி, யுபிஐ ஆகியவற்றின் மூலம் சொத்து வரியைச் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.