ஆவடியில் தாய், 3 வயது மகள் கொலை: ஜோதிடர் கைது

சென்னை அருகே உள்ள ஆவடியில் தாய் மற்றும் அவரது மூன்று வயது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


சென்னை அருகே உள்ள ஆவடியில் தாய் மற்றும் அவரது மூன்று வயது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண்பாண்டியன். ஊசி மணி, பாசி மணி மற்றும் பொம்மை பொருள்களை ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா ( 22). இவர்களது 3 வயது மகள் சுஜாதா.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் ரோஜாவும், அவரது மகள் சுஜாதாவும் இருந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை காலை அவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் கொலை செய்யப்பட்டுக் கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரோஜாவின் கணவர் அருண்பாண்டியனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய் ஜான்சி உதவியுடன் அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். பின்னர் அருண்பாண்டியன் வீட்டுக்குஅருகில் இருந்தவர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். 
அப்போது அந்தப் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஜோதிடர் வீரகுமார் (21) அருண்பாண்டியனின் வீடு இருந்த பகுதியில் அடிக்கடி சுற்றித் திரிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வீரகுமாரை பிடித்த போலீஸார் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். 
அதில், வீரகுமார் செவ்வாய்க்கிழமை இரவு அருண்பாண்டியனின் வீட்டுக்குள் புகுந்து ரோஜாவை வன்கொடுமை செய்ததும், அப்போது சப்தம் போட்ட ரோஜா, அவரது மகள் சுஜாதா ஆகியோரை வீரகுமார் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. 
இதையடுத்து வீரகுமாரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். தாய்-3 வயது மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com