சென்னை தூய்மையான நகரம் என உறுதி அளிக்க முடியுமா என மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தூர்வாரும் பணிகள் குறித்த விவரங்களை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. மேலும், மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கக்கூடிய கால்வாய்களை சரிவர சுத்தம் செய்து பராமரிப்பதும் இல்லை. எனவே டெங்கு கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில், கூவம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி நிர்வாகக் குழு, தூர்வாரும் பணிகளை கண்காணிக்க குழு அமைத்துள்ளதா? இந்த பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதனால் எந்த முன்னேற்றமும் இல்லையே? சென்னை மாநகரம் குப்பைகளே இல்லாத தூய்மையான நகரமாக மாறி விட்டது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளிக்க முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் தூர்வாரும் பணிகள் தொடர்பான விவரங்களை இரண்டு வார காலத்துக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.