ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் சொ.குமரன். இவர் புளியந்தோப்பு கே.எம். கார்டன் இரண்டாவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் குமரன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் , சதீஷ் ஆகிய இருவரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அப்பு, அருண், பிரவீண், தேவேந்திரன், சிற்பி, சரத், நரேந்திரன் ஆகிய 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.