தில்லியில் இருந்து புறப்பட்ட சரும நோய் விழிப்புணர்வு வாகனம் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை கடந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அதனை மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த விழிப்புணர்வு வாகனம் தில்லியில் இருந்து புறப்பட்டது. பல்வேறு மாநிலங்களைக் கடந்து செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், அதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சரும பாதுகாப்பு மற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து அப்போது எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சரும நலன் குறித்த காணொலி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்திய தோல், பால்வினை நோய் மற்றும் தொழுநோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் (ஐஏடிவிஎல்) சார்பில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.