அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள சார்லி சாப்ளின் 2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு
தயாரிப்பாளர் சிவா பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அம்மா கிரியேஷன்ஸ் உரிமையாளர் சிவா கடந்த 2007-ஆம் ஆண்டு என்னிடம் இருந்து ரூ.26 லட்சம் கடனாகப் பெற்றார். இந்த கடன் தொகையை அவரது தயாரிப்பில் வெளியாகும் படத்துக்கு முன்பாக திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறியிருந்தார்.
அதன்படி இதுவரை ரூ.11 லட்சத்தை திரும்பக் கொடுத்துவிட்டார். மேலும் அவர் எனக்கு வட்டியுடன் ரூ.16 லட்சம் தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவரது தயாரிப்பில் சார்லி சாப்ளின் 2 திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. அவர் எனக்குச் செலுத்த வேண்டிய எஞ்சியத் தொகையை திருப்பித் தராத பட்சத்தில் சார்லி சாப்ளின் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விஜயராணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிவா வரும் ஜனவரி 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.