சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் சாலைத் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எம்.ஜி.ஆர்.நகர் சூளைபள்ளம் ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன் (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்தார். அவரது நண்பர் பாலகணேசன் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு ஒரு மோட்டார்
சைக்கிளில் அருகே உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தச் சென்றனர். எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா சாலை அழகிரி சாலை சந்திப்பில்
செல்லும்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
மேலும் மோட்டார் சைக்கிள் அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மணிகண்டன், பாலகணேசன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதில் சிறிது நேரத்தில் மணிகண்டன் இறந்தார். பலத்த காயமடைந்த பாலகணேசன், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.