சென்னையில் வீடு புகுந்து தொடர்ந்து திருடி வந்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
யானைக்கவுனி, ஏழுகிணறு, ஆவடி, அம்பத்தூர், மடிப்பாக்கம், ஓட்டேரி, திருநின்றவூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் ஆளில்லாத வீடுகளின் கதவு பூட்டை உடைத்து நகை, பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது. இது குறித்து பூக்கடை தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபடுவது யானைக்கவுனி கல்யாணபுரம் பள்ளம் 5-வது தெருவைச் சேர்ந்த அ.சோனி என்ற சோனிராஜ் (39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சோனிராஜை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சோனிராஜ் 11 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஆதம்பாக்கம் பகுதியில் செல்லிடப்பேசி பறிப்பில் ஈடுபட்டதாக ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவைச் சேர்ந்த ரா.சேதுராமன் (21), அவரது கூட்டாளி 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.