வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கணவன், மனைவியை நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸார் கைது செய்தனர்.
கோடம்பாக்கம் புலியூர்புரம் 1-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (29). இவர் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது தொழில் தேவைக்காக வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தாராம். இதைத் தெரிந்து கொண்ட பூந்தமல்லி எஸ்.பி.அவென்யூ பகுதியைச் சேர்ந்த ஜான் மைக்கேல் (33), அவரது மனைவி ஷோபனா (31) ஆகியோர் பிரபாகரை அணுகி தாங்கள் வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு கமிஷன் தொகை ரூ.20 லட்சம் தரவேண்டுமெனக் கூறியுள்ளனர். இதை நம்பிய பிரபாகர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார். மேலும் ரூ.3.33 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினியையும் கொடுத்துள்ளார். ஆனால், ஜான் மைக்கேல் கூறியபடி வங்கிக் கடன் வாங்கிக் கொடுக்கவில்லையாம். தான் கொடுத்த கமிஷன் பணத்தையும், மடிக்கணினிகளையும் பிரபாகர் திருப்பிக் கேட்டபோது கொடுக்கவில்லை. இதையடுத்து பிரபாகர் அளித்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிரபாகர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் கோடம்பாக்கம் போலீஸார், மைக்கேல், ஷோபனா தம்பதியை புதன்கிழமை கைது செய்தனர்.