விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க சென்னையில் வரும் 9-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விடுபட்ட தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
தற்போது ஜூலை 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் தலைமையில் அம்பத்தூர், ஆலந்தூர், மாதவரம், மதுரவாயல், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களிலும் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் நிர்வாக அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளன. எனவே அனைத்து விவசாயிகளும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.