காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடந்த ரூ.20.69 கோடி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடந்த ரூ.20.69 கோடி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் மற்றும் போரூர் கிளைகளில் கடந்த 2010, 2011ஆம் ஆண்டுகளில் ரூ.20.69 கோடி கையாடல் மற்றும் கடன் மோசடி மூலம் முறைகேடு நடந்தது. இதுதொடர்பாக பல்லாவரம், போரூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
பின்னர், இந்த வழக்கை போலீஸார் முடித்து வைத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்து விட்டனர். இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டுறவு வங்கியின் முன்னாள் பணியாளர் பாபு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கை தமிழக போலீஸார் சரியாக விசாரிக்காததால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 இதனைத் தொடர்ந்து பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த பெருந்தொகை முறைகேடு தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை தமிழக போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கூறி வாதிடப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த முறைகேட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com