உயர்நீதிமன்ற உத்தரவின் படி, தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளைப் போல, தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளும் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றன.
விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணங்களை பன்மடங்கு வசூலிப்பதாகவும், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக பி.விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கூடுதல் விண்ணப்பக் கட்டணமோ அல்லது கூடுதல் கல்விக் கட்டணமோ வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை அனைத்து சுயநிதி கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள பல்கலைக்கழகம், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலை மட்டும் வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் பல்கலைக்கழகம் வெளியிடவேண்டும் என்பதோடு, உறுதியான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்கின்றனர் பேராசிரியர்கள்.