சென்னை கிண்டி நேரு நகர் கருமாரியம்மன் கோயில் தெருவில் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை இரவு ரௌடி கும்பல் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொந்தரவு செய்யும் வகையில் இந்த கொண்டாட்டத்தில், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அந்தப் பகுதி மக்கள், கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்த நபர்கள், அங்கிருந்து கலைந்துச் சென்றுவிட்டனராம். இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு ரௌடி தலைமையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
சென்னையில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஒரு ரௌடி கும்பல் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, கையும்களவுமாக கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் ரௌடிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், மீண்டும் ரௌடிகள் சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது போலீஸாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.